பூச்சாண்டிக்கு பயந்த தாய்
ஒவ்வொரு குறும்பிலும்,
தன் தாய்க்கு
அவளது பால்யத்தை
நினைவூட்டுகிறது
குழந்தை.
****
கனவில் விளையாடும்
தன் தேவதை தோழிகளை
பிரிய மனமில்லாமல்,
தினமும் காலையில்
அழுகையோடு விழிக்கிறது குழந்தை!
****
திட்டிய அப்பாவை,
ரெட் ரேஞ்சர்சிடம்
சொல்லி விடலாமென
விசும்பும் தாயை
தேற்றுகிறது குழந்தை!
****
"பூச்சாண்டியிடம்
பிடித்து கொடுத்துடுவேன்"என்று
மிரட்டினாள் தாய்.
"கொடுத்துக்கோ!
எனக்கொன்னும் பயமில்லை"
என்றது குழந்தை!
அடுத்து
என்ன சொல்லி
மிரட்டுவது என தெரியாமல்
விழிக்கிறாள்,
தன் பால்யத்தில்
பூச்சாண்டிக்கு பயந்த தாய்!
****
பொம்மைகளின் மொழியில்
புலமையோடு பிறக்கும் குழந்தை,
புதுமொழி கற்கையில்
இழக்குது புலமை.
கருத்து்கள் (7)











