பூச்சாண்டிக்கு பயந்த தாய்



ஒவ்வொரு குறும்பிலும்,
தன் தாய்க்கு
அவளது பால்யத்தை
நினைவூட்டுகிறது
குழந்தை.

****

கனவில் விளையாடும்
தன் தேவதை தோழிகளை
பிரிய மனமில்லாமல்,
தினமும் காலையில் 
அழுகையோடு விழிக்கிறது குழந்தை!

****

திட்டிய அப்பாவை,
ரெட் ரேஞ்சர்சிடம்
சொல்லி விடலாமென
விசும்பும் தாயை
தேற்றுகிறது குழந்தை!

****

"பூச்சாண்டியிடம்
பிடித்து கொடுத்துடுவேன்"என்று
மிரட்டினாள் தாய்.

"கொடுத்துக்கோ!
எனக்கொன்னும் பயமில்லை"
என்றது குழந்தை!

அடுத்து
என்ன சொல்லி
மிரட்டுவது என தெரியாமல்
விழிக்கிறாள்,
தன் பால்யத்தில்
பூச்சாண்டிக்கு பயந்த தாய்!

****
பொம்மைகளின் மொழியில்
புலமையோடு பிறக்கும் குழந்தை,
புதுமொழி கற்கையில்
இழக்குது புலமை.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

குடியரசை போற்றுவோம்!!!



ஐந்தாண்டுக்கொரு முறையேனும்,
கும்பிட்ட கரங்களோடு தலைவர்களும்;
வாங்கிய கடனெல்லாம் வட்டியோடு தள்ளுபடியும்;
ஜனவரியில் பிரிதொரு விடுமுறையும்,
அதில் சிறப்பு நிகழ்ச்சிகளும், திரைப்படமும்;
ஓட்டுக்கு ஐந்நூறும், ஓசியில் பிரியாணியும்;
இலவச  டிவியும், இன்ன பிற சலுகைகளும்
குடியரசு இல்லாமல் சாத்தியமில்லை
குடியரசை போற்றுவோம்!!!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

பாப்பாத்திக்குருவி




தோட்டத்து நாவல் மரத்துக்கு
தினமும் வரும் ஒரு குருவி;
கழுத்தோரம் கருப்பு நிறத்தோடு
கீச்சொலி எழுப்பும்  செங்குருவி;
பெயர் தெரியா அப்பறவைக்கு,
நாங்களிட்ட பேர் பாப்பாத்திக்குருவி;
அதிகாலை கனவுகளிலும்,
சாயங்கால கதைகளிலும்
தவறாமல் இருந்தது பாப்பாத்தி;
வாத்தியார் வராத வகுப்புகளிலும்
பாப்பாத்தியே பேச்சானது; 
நாவல் பழம் பொறுக்கையில்
நாங்களும் கீச்சென கத்திக்கொண்டோம்;
அதிசயமாய் உதிர்ந்த அதன் செவ்விறகு
ஐந்தாம் வகுப்பு புத்தகத்தில் பொக்கிஷமாய்..

பால்யம் தொலைத்து, சுயம் மறந்து,
பணம் தேடி திரிந்த,  ஈரேழு வருடத்தில்
நாவல் மரத்தை பலியிட்டு,
அதன் கல்லறையாய் நிற்கிறது
அறுநூறு சதுரடியில் கனவு இல்லம்.
அழைப்பு மணி சத்தத்தில்
வாழ்கிறது பாப்பாத்திக்குருவி.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

தசாவதாரங்கள்



கலாச்சாரங்கள் இணையும்
கலைப்பயணமாய், பேருந்து ஒன்றில்
இன்ப சுற்றுலா சென்றன
தசாவதார பாத்திரங்கள்.

 மேல்நாடு வாழும்  மகன் ரோஸ்மில்க்
அனுப்புவானென அரற்றிவந்தார்  பாட்டி;
புஜபலம் காட்டி, கட்டி புரண்டனர்
பிளட்சரும், நரஹாசியும்;

தன் இருக்கை தனக்கே சொந்தமென,
அராஜகம் செய்தார் அவதார்சிங்;
தனக்கென தனியிருக்கை வேண்டி
ஆர்ப்பாட்டம் செய்தார் பல்ராம் நாயுடு;

ஆடு புலி ஆட்டம் ஆடி வந்தனர்
ரங்கராஜன் நம்பியும், பூவராகனும்;
கோவிந்தும், கலிஃபுல்லாவும் குனிந்திருக்க
லாவகமாய் பச்சக்குதிர தாண்டினார் புஷ்;

இப்படியாய் ஆடிக்களைத்து, அடுத்தவர்
தோளிலும் மடியிளுமாய் கண்ணயர்ந்தனர் சிலர்;
குரோதம் குறைந்து, அணைத்த வாக்கில்
தூங்கினர் பிளட்சரும் நரஹாசியும்;

அருகருகே அமர்ந்த போதும்
கடைசிவரை தூங்கவுமில்லை,
ஏனோ தோள் சாயவுமில்லை
ரங்கராஜனும், பூவராகனும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

நெடுஞ்சாலை கடக்கும் எறும்புகள்




ட்ட முடியா எல்லைகள் தேடி
தொலைவுகள் கடக்கும் பயணம்;
நிச்சயமாய் இன்றே இல்லையெனினும்
நிதர்சனமாய் உடன்வரும் மரணம்.

க்கரை சேர்வது சுலபமில்லை
ஆனாலும் ஆசைகளுக்கு அளவில்லை;
முடிவில்லா பந்தயத்தில்
முந்தி செல்பவர்கள் முதலில் செல்வதில்லை.

தேடலோன்றே நோக்கம், அதில்
ஊடலும், கூடலும் சொச்சம்;
ஊன் தேடி பயணம், அதில்
உயிர் என்பது துச்சம்.

ர்த்தமற்ற பயணத்தில்
அற்பமாய் மரணிக்கிறோம்;
நிலையற்ற வாழ்க்கை ஓட்டத்தில்,
நெடுஞ்சாலை கடக்கும் எறும்புகள்தாம்  நாமும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS